சனி, ஏப்ரல் 09, 2016

புத்தகம் படிக்கும் பழக்கம்

நான் சிறுவயதிலேயே புத்தகம் வாசிப்பதை கண்டு என் அப்பா எங்கே நான் கதை கிதை எழுதி கிறுக்கனாகி விடுவேனோ என்று பயந்ததுண்டு.  பின்னே, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே நாவல் (தமிழ்) படிக்க ஆரம்பித்து விட்டதால் கொஞ்சம் மிரண்டு தான் போனார்.  அப்போது, எங்கள் வீட்டு பரணை மேல் ஒரு கூடை நிறைய புத்தகங்கள் இருக்கும்.  பெரும்பாலும், தமிழ் நாவல்கள்.  புஷ்பா தங்கதுரை, ராஜேஷ் குமார், சாண்டில்யன், கல்கி போன்றோர் எழுதிய நாவல்கள் தான்.  மற்றும், மருத்துவம், சோதிடம், போன்ற பிற நூல்களும் இருக்கும்.  என் அப்பா வேலைக்கு சென்று விட்ட பின், பரணை மேல் ஏறி ஒரு நாவலை எடுத்துக் கொண்டு யாரும் பார்க்காத ஒரு இடத்திற்கு (மொட்டை மாடி) சென்று படிப்பது வழக்கம்.  அந்த சிறிய வயதில் முழுக்க  புரியாத போதிலும், க்ரைம் சம்பந்தமாக கொஞ்சம் புரிந்து ஒரு த்ரில் கொடுத்த அனுபவம் ஞாபகம் இருக்கிறது.  நான் இப்படி திருட்டுத்தனமாக படிப்பது அப்பாவிற்கு எப்படியோ தெரிந்து என்னை திட்டி தீர்த்தார்.  நான் அந்த கதைகளை எல்லாம் படித்து  கெட்டு போய் உருப்படி இல்லாமல் போய் விடுவேன்  என்று அவருக்கு பயம்.  வார வாரம் வரும் தொடர்களை கோர்த்து புத்தகம் ஆக்கி வைத்திருப்பார்கள்.  அப்படி ஒரு புத்தகமாய் தான் பொன்னியின் செல்வன் படித்தேன்.  அப்போது ஆறாவது படித்ததாய் ஞாபகம்.  ஐந்து புத்தகங்களாக இருந்ததை ஒரு வாரத்தில் முடித்து விட்டேன் (பரீட்சை முடிந்ததும் விடும் லீவில்).   இப்படி படிப்பதை பார்த்து சொந்தக்காரர்கள் என்ன உங்க பையன் புத்தக புழுவாக இருக்கிறான் என்று என் அம்மாவை பார்த்து கேட்பார்கள். கதை புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு பாட புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை எனினும் ஓரளவிற்கு மார்க் வாங்கி விடுவேன்.  

பிறகு, கல்லூரி காலத்தில் நண்பன் ஒருவன் அறிமுகப்படுத்தியதில் பாலகுமாரன் படிக்க ஆரம்பித்து பிறகு அப்படியே ஜெயகாந்தன், கல்கி, புதுமைபித்தன், சுஜாதா, சுந்தர ராமசாமி என்று படிக்க ஆரம்பித்து புத்தக புழுவான நான் புத்தக பட்டாம்பூச்சி ஆகி விட்டேன்.   ஆனால் இவ்வளவு கதைகள் படித்து இருந்தாலும், நான் படித்ததை யாரிடமும் விவாதித்ததில்லை.  ஏனென்றால், என் நண்பர்கள் பலருக்கு கதை படிக்கும் பழக்கமில்லை.  என்னை சுற்றிலும் இலக்கிய கூட்டமெல்லாம் இருக்காது. எப்போதாவது என் நண்பர்கள் வீட்டிற்கு வந்து புத்தக அலமாரியை பார்த்தால், நீ புத்தகங்கள் எல்லாம் படிப்பாயா என்று ஆச்சர்யம் படுவார்கள். என் மகள் பிறந்தவுடன் அவளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் வரும் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் அவளுக்கு புத்தகம் படித்தால் தூக்கம் தான் வரும் என்று இப்போது தெரிந்து கொண்டேன்.  முன்பெல்லாம், புத்தகம் படிக்காதவர்களை கண்டால் என்ன மனிதர்கள் இவர்கள் என்று தோன்றும்.   ஆனால், இப்போது தான் புரிகிறது, புத்தகம் படிப்பது என்பது சில பேருக்கே பிடித்தமானது.  அந்த பழக்கம் சில பேருக்கே வரும்.  இப்படி புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும்.  எவ்வளவு பெரிய புத்தகம் ஆனாலும் கையில் எடுத்து விட்டால், முழுக்க படிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள். இதனால் பல வேலைகள் பாதிக்க படும். 

நான் சமீபகமாக France போய் இருக்கும் போது, அங்கே ரயிலில் நிறைய பேர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யம் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, அங்கு ரயிலுக்குள் செல் போன் சிக்னல் கிடைக்காது என்றும், அதனால் புத்தகம் தான் படிப்பார்கள் என்றும்.  இருந்தாலும், புத்தகம் படிக்கும் பழக்கம் அங்கே அதிகம்.  நம்மூரிலும் வருடம் வருடம் நடக்கும் புத்தக விழாவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.  சில புத்தகங்களையும், நிறைய நொறுக்கு தீனியும் (டெல்லி அப்பளம், தோசை, காப்பி) வாங்குவதில் அத்தனை ஆர்வம்.  நம் மக்களுக்கு எங்கு போனாலும் Snacks கடை இருக்க வேண்டும்.  அப்போது தான் எதுவுமே நடக்கும்.  இப்போது whatsapp, facebook , Kindles மற்றும் Blogs யுகத்திலும் புத்தகங்கள் விற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.  முன்பெல்லாம், குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வரும் வாரத்தொடர்களை படித்ததுண்டு. இப்போது அவற்றை படிக்கிறார்களா என்று தெரிய வில்லை. இன்னொன்றையும் பார்க்கிறேன்.  கொஞ்சம் மேல் தட்டு மக்கள் என்றால் ஆங்கில புத்தகங்கள் தான் படிக்கிறார்கள்.  சாமான்ய தமிழ் மக்கள் படிப்பது குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற வார பத்திரிக்கைகள் மட்டும் தான்.  என்னை போல் மற்றவர்களால் உந்த பட்டும், வேறு சில அறிமுகங்களாலும் தமிழில் நல்ல எழுத்தாளர்களின் நாவல்கள் படிப்போரும் உண்டு.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் நாட்டம் இருக்கும். புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ளவருக்கு அதில் உள்ள சுவை போகவே போகாது.  மேலும், புத்தகம் படிப்பவர்கள் ஒரு வித மேன்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது என் கருத்து. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தாராளமாக புத்தகம் படிக்கும் பழக்கத்தை உண்டு பண்ணலாம்.  முதலில் தமிழில் வாசித்து பின்பு ஆங்கிலத்துக்கு மாறலாம். Google லில் சிறந்த தமிழ் நாவல்கள், சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் என்று தேடிப் பார்த்து வாங்கி படியுங்களேன்.

(புத்தகங்களை தயவு செய்து இரவல் மட்டும் கொடுத்து விடாதீர்கள்.  அது திரும்பி வரவே வராது!!!)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக