திங்கள், ஜூன் 20, 2016

சாலைகள் தோண்டாமை நன்று !!!

சென்னை மாநகராட்சிக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று சாலைகளை (ரோடு) தோண்டுவது.  தமிழில் வினைத்தொகை என்று படித்திருப்பீர்கள். அதாவது ஊறுகாய் என்பதை ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் என்று சொல்லலாம்.  அது போல் சென்னை ரோடுகளை - தோண்டிய ரோடு, தோண்டுகின்ற ரோடு, தோண்டும் ரோடு என்றும் சொல்லலாம்.  

Image result for chennai road digged

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகையில்,  எப்போதும் வரும் சாலையை தோண்டி இருந்ததால் மாற்று சாலையை பயன்படுத்தி வந்தேன்.  இப்படி செய்து இரண்டு மூன்று மாதம் ஆகிவிட்டதால், இன்று மறுபடியும் வழக்கமான சாலையில் வரலாம் (தோண்டியதை சரி பண்ணி இருப்பார்கள் என்ற நப்பாசை) என்று வந்து பார்த்தால் முன்பை விட ஆழமாக தோண்டி இருந்தார்கள்.  அப்போது உதித்தது தான் மேலே சொன்ன ஊறுகாய் சமாச்சாரம்.  ரோடு தோண்டுவதற்கான காரணங்களை இப்போது ஆராய போவதில்லை.  ஆனால் இப்படி தோண்டிக்கொண்டே இருப்பதால் மக்கள் படும் அவஸ்தை இருக்கிறதே...அதை எழுத்தால் முழுமையாக எழுத முடியாது. 

பாரிஸ், ரோம் போன்ற நகரங்களில் சில இடங்களில் அரசாங்கத்திடம் அனுமதி வாங்காமல் எங்கேயும் தோண்ட கூடாது.  புராதன காலத்தில் போட்ட ரோடுகளாம் அவை.   இங்கே எங்கள் வீட்டு ரோட்டை தோண்டினால் பல புராதன ரோடுகள் உள்ளே புதையுண்டு கிடைக்கும்.  பல சமயங்களில் ரோட்டை தோண்டும் தொழிலாளர்களுக்கு அதை ஏன் தோண்டுகிறோம் என்றே தெரிவதில்லை.  போன மாசம் தானே தோண்டுனீங்க, மறுபடி ஏன் தோண்டுறீங்க என்று கேட்டால் வெள்ளந்தியாக சிரிப்பார்கள்.  அது போன மாசம்.  இது இந்த மாசம் என்ற பதிலை மானசீகமாக நினைத்துக் கொள்வேன். 

சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் இருக்க ஆட்டோ காரர்கள் வளைந்து வளைந்து ரோட்டின் மீது இன்னொரு ரோட்டை போடுவார்கள்.  அவர்கள் போடும் புது ரூட்டை பின் தொடர்ந்து நாம் போய் விடலாம்.  என்ன, அலுவலகத்திற்கு கொஞ்சம் லேட்டாக போக வேண்டும்.  சில ரோடுகளுக்கு பள்ளங்களிலிருந்து சாப விமோசனமே கிடையாது.  365 நாட்கள் 24 மணி நேரம் தோண்டப் பட்டே இருக்கும்.  மக்களும் லேசு பட்ட ஆட்கள் இல்லை.  நீ தோண்டிகிட்டே இருக்கியா அதை பற்றி எனக்கென்ன கவலை என்பது மாதிரி மக்கள் குறுக்கும் நெடுக்கும் சாலைகளை கடக்க வண்டியில் போகும் எங்களுக்கு சரக்கே அடிக்காமல் போதையில் வண்டி ஓட்டுவது போல நடுங்கும்.  

இன்று, தோண்ட பட்ட சாலைகளை பற்றி ரொம்ப தோண்டிவிட்டேன். இன்னும் தோண்டினால் பள்ளத்திலிருந்து சாக்கடை, குப்பை போன்ற இன்னும் பல வஸ்துகள் வெளிவந்து விடும் என்பதால் இத்தோடு முடித்து விடுகிறேன்.  நாளை தோண்டப்படாத இன்னொரு ரோட்டை கண்டு பிடிக்க வேண்டும்.





ஞாயிறு, ஜூன் 19, 2016

நெருப்புடா...கபாலி பாடல்

பருப்புடா, தக்காளிடா ...என்று கபாலியின் பாடலையொட்டி காமெடிகள் வந்தாலும் நெருப்புடா பாடல் நிஜமாகவே நெருப்பு ரகம்.    ரஜினி ரசிகன் என்பதால் மட்டும் அல்லாமல் பொதுவாகவே கபாலியின் பாடல்கள் எல்லாமே பிடித்திருந்தது.   ஏனென்றால் கபாலி பாடல்கள் பழைய இசை வடிவங்களை ஒத்திராது புதிதாக இருக்கிறது.  

சிவாஜி, எந்திரன் பட பாடல்கள் ரஹ்மானின் வழக்கமான பாடல்களாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தன.  இளையராஜா ரஜினிக்கு பாடல்கள் போட்ட போது, படத்துக்கு படம் வித்தியாசமாய் இசையமைத்திருப்பார். அம்சலேகாவின் கொடி பறக்குது கொஞ்சம் Different ஆக இருந்தது.    ஆனால் கபாலி இது வரை வந்த ரஜினி பட பாடல்கள் போல் இல்லாமல் முற்றிலும் புதிதாய் அதே சமயம் powerful ஆகவும், இளைய தலைமுறையை கவரக்கூடிய வகையிலும் உள்ளது.

நெருப்புடா பாடலை கேட்டால்  மேற்கத்திய Heavy Metal வகை இசையை போல் தெரியும்.  இந்த வகையறாவை யொட்டி சில தமிழ் பாடல்கள் வந்திருந்தாலும், இது தான் முழுக்க முழுக்க Heavy Metal யொட்டி வந்த தமிழ் பட பாடல் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு Metallica என்னும் இசைக்குழுவின் இந்த Heavy Metal வகை பாடலை கேளுங்களேன்.


இப்போது நெருப்புடா பாடலை கேளுங்களேன்.


நெருப்புடா ...நிஜமாகவே நெருப்பான பாடல் தான்......



செவ்வாய், ஜூன் 14, 2016

முகமது அலி ஏன் இவ்வளவு பிரபலம்?

முகமது அலி ஒரு குத்து சண்டை வீரர்.  அவருக்கு லைலா என்றொரு பெண் இருக்கிறார்.  அவரும் ஒரு குத்து சண்டை வீரர் தான்.  முகமது அலி பார்கின்சன் நோயால் அவதி பட்டார்.  இவ்வளவு தான் முகமது அலியை பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவர் சமிபத்தில் இறந்ததும் செய்தி தாள்களிலும், தொலைகாட்சியிலும், வலை பக்கங்களிலும் வந்த இரங்கல்களையும், முக்கியத்துவத்தையும் கவனித்தால் ஒரு விளையாட்டு வீரர் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனார் என்று ஆச்சர்யம் வந்தது.

Image result for why muhammad ali is very popular

முகமது அலி இறந்தது செய்தி தாள்களில் முதல் பக்கத்தில் வந்த தலைப்பு செய்தி.  பி.பி.சி வலை பக்கத்தில் கூட பெரும்பாலும் இந்த செய்தியை தான் காண முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.    நம்ம ஊர் செய்தி தாள்களில் கூட முகமது அலி, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை பார்க்க முடிந்தது. கருணாநிதியே தனது இரங்கல் செய்தியில், அவரின் வீட்டிற்கும், அறிவாலயத்திருக்கும் 1990 இல் முகமது அலி சென்றிருப்பதை குறிப்பிட்டிருந்ததை கண்டவுடன் ஒரு குறுகுறுப்பே  வந்து விட்டது.  


ஒரு குத்து சண்டை வீரருக்கு இவ்வளவு பேரும், புகழும் எப்படி கிடைத்தது என்று ஆச்சர்யமாக இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது மைக் டைசன் என்னும் குத்து சண்டை வீரர் புகழ் பெற்றிருந்தார்.  இவர் நாக் - அவுட்டுக்கு பேர் போனவர். இவரது சண்டையை டி.வியில் நேரடியாக ஒளிப்பரப்பினார்கள். அதை பார்த்து விட்டு அடுத்த நாள் பள்ளிகூடத்தில் ஆஹா ஓஹோ  என்று பேசியது ஞாபகம் இருக்கிறது.  ஆனால் இது எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான். பிறகு மைக் டைசனொ அல்லது குத்து சண்டையோ தலை தூக்கவேயில்லை. குத்து சண்டையை விட நாங்கள் டென்னிசை அதிகம் ரசித்திருக்கிறோம். இவான் லென்டில், போரிஸ் பெக்கர், ஆண்ட்ரிவ் அகாசி போன்றவர்கள் அப்போது டென்னிஸில் மிகவும் பிரபலம். ஆனால் இவர்கள் யாரும் முகமது அலி அவர்களுக்கு புகழ் வாய்ந்தவர்களா என்று தெரியவில்லை.   சச்சின் டெண்டுல்கர் எல்லாம் இந்தியா போன்ற கிரிக்கெட் பைத்தியம் உள்ள நாட்டில் தான் பிரபலம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கால்பந்து தான் மிகவும் பிரபலம். இப்படி இருக்க, முகமது அலியை பற்றி வலை பக்கங்களில் அலசியதில் கிடைத்த தகவல்கள்:
  • அமெரிக்காவில் பிறந்த கருப்பர் இனத்தை சேர்ந்த முகமது அலி பிறப்பால் கிறிஸ்தவர்.  பின்பு முஸ்லிமாக  மாறியவர்.
  • உலகத்திலேயே முதல் முறையாக ஹெவி வெயிட் பிரிவில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். அதுவும் வெவேறு காலக்கட்டத்தில் வென்றார்.
  • முகமது அலி எளிமையாக பழக கூடியவர்.  பெண்களுக்கு பிடித்தமானவர். நான்கு பெண்களை மணந்து ஒன்பது பிள்ளைகளுக்கு தந்தை.
  • வியட்நாம் போரை எதிர்த்தவர். இந்த காரணத்தால் தனது பட்டத்தை இழக்க  வேண்டியிருந்தது.   கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவர். 
  • பார்கின்சன் நோயால் பாதிக்க பட்டிருந்தாலும் பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சமுக பணியாற்றியிருக்கிறார்.
  • பத்திரிக்கைகளுக்கு சுவாரசியமாக பேட்டி கொடுப்பார்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
இப்படியும், மற்றும் அவர் விளையாடி ஜெயித்த போட்டிகளை பற்றியும் தகவல்கள் கிடைத்தன.   மேலும், இவரை விட குத்து சண்டை போட்டியில் வலுவானவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும்  அறிய முடிந்தது. இதை எல்லாம் பார்த்த பிறகு, உண்மையை சொல்ல வேண்டுமானால் எதனால் இவர் இத்தனை பிரபலமானார் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.  என்ன தான் சாதித்தாலும் சிலர் மட்டும் தான் பிரபலமாக வேண்டி பிறந்திருக்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது.   எல்லோரும் அவரை புகழ்வதால் அவர் நல்லவராகவே இருக்க கூடும்.  அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.



வியாழன், ஜூன் 02, 2016

ஸ்வட்ச் பாரத் - ஹிட்டா? ப்ளாப்பா ?


Image result for swachh bharat abhiyan

கண்ட கண்ட பொது இடங்களில் Mr. பொது ஜனம் உச்சா போறதை இந்த ஸ்வட்ச் பாரத் நிறுத்தி விட்டதா?  காத்தாட வெளியே போறத விட்டுட்டு  இந்த தண்ணி வராத கழிப்பறைக்கு யாரு போவாங்கன்னு பேசுகிற பொது ஜனத்தை இந்த திட்டம் மாற்றி விட்டதா?  ஆனால் சூரியன் F.M இல், ஸ்வட்ச்   பாரத் பற்றிய விளம்பரம் அடிக்கடி வருகிறது.  அதுவும் ஹிந்தியில்!!  எப்படி பட்ட காம்பினேஷன் பாருங்கள்!!  விளம்பரம் கொடுப்பவர்க்கு இது தமிழ்நாடு, ஹிந்தியில் விளம்பரம் கொடுத்தால் யாருக்கும் புரியாது என்பது புரியவில்லை.  அந்த விளம்பரத்தை போடும் சூரியன் அலைவரிசைக்கோ ஹிந்தியில் விளம்பரம் கொடுத்தால் தங்கள் கழகத்தின் தமிழ் காவலர் இமேஜ் கெட்டு போகுமோ என்று கவலையில்லை.  எல்லாம் பணம் ஐயா பணம்...

எது எப்படியோ, இந்த திட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. ஆரம்பத்தில், வி.ஐ.பி என்று அறியப்படும் பெரிய மனிதர்கள் நிறைய பேர் கையில் துடைப்பத்தோடு காட்சி கொடுத்தனர்.  நம் கமல்ஹாசன் கூட அந்த மாதிரி பத்திரிக்கை புகைப்படங்களில் வந்தார்.  ஆனால் கையில் பக்கெட்டோடு ஏரியை சுத்தபடுத்துவதற்காக. 

Image result for kamal hassan swachh bharatImage result for kamal hassan swachh bharat


இப்படி இவர்கள் எல்லாம் கையில் துடைப்பத்தோடும் பக்கெட்டோடும் போட்டோவிற்கு போஸ் கொடுத்ததற்கு யாரும் துட்டு கொடுக்க வில்லையோ என்னவோ, ஸ்வட்ச் பாரத் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.  நான் இருக்கும் சிங்கார சென்னையை  பார்க்கிறேன்.  குப்பை கூளங்களும், சாலையில் சாக்கடை ஒழுகி ஓடுவதும், ரோட்டில் எச்சில் துப்புவதும், குப்பையை வீசுவதும் எதுவும் நிற்கவில்லை.  இப்போது தான் ஸ்வட்ச் பாரத் திட்டம் பிகார், உத்தர் பிரதேஷ் போன்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. எப்போது தமிழ்நாடு வருமென்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் நம்மூருக்கும் ஸ்வட்ச்பாரத் வரியென்று 0.5% வரி போட்டு விட்டார்கள்.  

இந்த திட்டத்தின் படி 2019  ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் திறந்தவெளி கழிப்பதை அடியோடு நிறுத்துவதே முதல் நோக்கமாகும்.  இதற்காக 12 கோடி கழிப்பறைகளை கிராமங்களில் கட்ட வேண்டும் என்ற மத்திய அரசாங்கம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக டாட்டா, மகிந்திரா போன்ற நிறுவனங்களும், உலக வங்கியும் பொருளுதவி செய்கின்றன.  முக்கியமாக பெண்கள் கழிப்பறை தேடி வீட்டிற்கு வெளியே செல்வது மோடி அவர்களுக்கு அதிக கவலை கொடுத்திருக்கிறது.  மோடியின் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டம்.  நான் கூட, சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களில் காந்தி, நேரு  முதற்கொண்டு அப்துல் கலாம் வரை யாரும் சுத்தம் சுகாதாரம் பற்றி பெரிதாக சீர் திருத்தம் கொண்டு வரவில்லையே என்று யோசித்ததுண்டு. ஆனால் முதன்முறையாக தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்த மோடியை பாராட்டுகிறேன்.   அவர் கனவு நனவாக இன்னும் சில வருடம் காத்திருப்போம்.  கழிப்பறை மட்டுமில்லாமல் அதற்கும் மேலே பொது இடங்களில் சுகாதாரம் பற்றியும் அவரது திட்டம் அமையும் என்றும் எதிர்பார்ப்போம்.  

அனால் நம் Mr. பொது ஜனமும் கொஞ்சம் மனசு வந்து பொது இடங்களில் உச்சா போறது, எச்சில் துப்புறது, லுங்கி கட்டிக்கொண்டு டாஸ்மாக்கில் சரக்கடித்து ரோட்டோரத்தில் உருண்டு கிடப்பது, வாங்கின பிளாஸ்டிக் கவரை கண்ட இடங்களில் போட்டு விடுவது போன்றவற்றை நிறுத்தவும் இந்த ஸ்வட்ச்பாரத் திட்டம் இப்போதே வகை செய்ய வேண்டும்.  இதற்காக பொறுத்திருந்து 2025 லேயா திட்டமிடமுடியும்?  நம் நாட்டில் எதற்குமே கொஞ்சம் அதிகம் போராட வேண்டும் போலிருக்கிறது.  சுதந்திரம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்.  அது போல சுகாதாரம் வாங்கவும் கஷ்டப்பட வேண்டும் போலிருக்கிறது.  முன்னது வெள்ளைக்காரனிடமிருந்து வாங்க போராட வேண்டியிருந்தது.  பின்னது, நம்மிடமிருந்து நாமே வாங்க போராட வேண்டியிருக்கிறது.  பொதுநலம் நம் சுயநலமாக இருக்கட்டுமே !!!

சரி!!  ஸ்வட்ச் பாரத் - ஹிட்டா? ப்ளாப்பா ? இன்னும் ஒரு வருடம் கழித்து பார்ப்போம்.