திங்கள், மார்ச் 28, 2016

மூடர்கூடமாகும் பள்ளிக்கூடங்கள்

நாம் திறமையாய் வேலை செய்ய வேண்டுமா?  நன்றாக சம்பாதிக்க வேண்டுமா?  நம்மை எல்லோரும் புகழ வேண்டுமா?  அதற்கு கடின உழைப்பு வேண்டும் என்று உங்களுக்கு தெரியும்.  ஆனால் அது வெறும் 50% சதவீதம் தான்.  மீதி 50% உங்களுக்கு நீங்கள் செய்யும் தொழிலில் இயற்கையான திறமை இருக்க வேண்டும்.  உங்களுக்கு இயற்கையான திறமையும், கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள்.   ஆனால் நம் சமுதாயத்தில் பார்க்கும் மனிதர்களிடம் திறமை வேறொன்று இருக்கும், செய்யும் தொழில் வேறொன்று இருக்கும்.  வெகு சிலரே இதை உடைத்து இயற்கையாக தமக்கு வரும் திறமையையே தொழிலாக அமைத்து கொள்கிறார்கள்.  உதாரணம்: டெண்டுல்கர், இளையராஜா, நல்லி குப்புசாமி  போன்றோர்கள்.   (இவர்கள் சட்டென்று ஞாபகம் வந்தவர்கள்). இதற்கு முக்கிய காரணம் நம் கல்வி முறை.

ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்.  ஆனால் நம் நாட்டில் ஏட்டுசுரைகாய் தான் பல ஆண்டுகளாய் பெரும்பாலானோர் வாழ்க்கையை தீர்மானித்துக் .கொண்டிருக்கிறது.  பள்ளி படிப்பு தான் பலர் தலைவிதியை நிர்ணயம் செய்கிறது.  இதை நன்றாக தெரிந்துக் கொண்டவர்கள் பள்ளிக்கூடத்தை வியாபாரமாக்கிக் கொண்டார்கள்.  பெற்றோர்களும் இந்த மாய வலையில் வீழ்ந்து படிப்பு ஒன்று தான் தங்கள் பிள்ளைகளை காக்கும் கடவுள் என்று ஏமாந்து போகிறார்கள்.

அந்த கால அப்பாக்களுக்கு தங்கள் பிள்ளைகளின் திறமைகளை கண்டுபிடிக்க தெரிந்திருந்தாலும் அதை மேலும் வளர்க்க வசதி இருந்திருக்க வில்லை. அதனால், நன்றாக படம் வரையக்கூடிய தன மகனை ஒரு பெரிய ஓவிய பள்ளியிலோ அல்லது பிரபல ஓவியரிடமோ பயிற்சி பெற அனுப்ப நினைத்ததில்லை.  அவனை படிப்பு வரவில்லை என்றாலும் ஏதாவது சுமாராக படிக்க வைத்து சராசரி வேலையில் சேர்த்து சராசரி மனிதனாக வாழ வைத்து விடுகிறார்கள்.  இப்போதும் அலுவலகங்களில் பார்க்கலாம். எவ்வளவோ திறமை மனிதர்களிடம் தூங்கி கொண்டு இருப்பதை.  அவர்களது அப்பாக்கள் அந்த  திறமையை வளர்க்கவில்லை. அவர்களையும் குறை கூற முடியாது.  அப்போது அவர்களது குடும்ப கஷ்டம் அப்படி.

எனக்கு, இத்தனை வருடம் வேலை செய்து குப்பை கொட்டியதில் ஒன்று புரிந்தது.  அலுவலகத்திலும், தொழிற்சாலைகளிலும் நாம் செய்யும் வேலை நாம் பள்ளிக்கூடத்தில் கற்றதில் வெகு சில பங்கே ஆகும். சொல்லப் போனால், நமது பள்ளிக்கூடத்து படிப்பு என்பது நாம் உலக விஷயங்களை தெரிந்துக் கொள்ள உதவுவது. இந்த படிப்பு எல்லோருக்கும் வேண்டும் தான். ஆனால் இதுவே ஒருவர் செய்யும் வேலைக்கு ஆதாரமாக இருக்க கூடாது.   ஆனால் என்ன நடக்கிறது இங்கே.  ஒருவர் தலையெழுத்தையே பள்ளிகூட மதிப்பெண்கள் தான் தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும்/ சிறுவர்க்கும் ஒரு திறமை இருக்கும்.  அது இயற்கையாக இறைவன் அளித்தது.   நம் நாட்டில் அந்த திறமை படிப்பு என்பதற்கு முன்பு காணாமல் போய் பள்ளிகூடதிலேயே மடிந்து போய் விடுகிறது.  இசையமைப்பது, நடிப்பது, கதை, கவிதை எழுதுவது, நன்றாக ஒரு விளையாட்டை விளையாடுவது, பாடுவது, நடனம் ஆடுவது, மேடை பேச்சு, நன்றாக பேசுவது, கணக்கு போடுவது, வியாபாரம் செய்வது, விமர்சனம் செய்யும் திறமை, வேளாண்மை, சமையல், அறிவியலில் நாட்டம், இயந்திரங்களில் நாட்டம் இப்படி எவ்வளவோ இருக்கு. ஆனால் இது எல்லாத்தையும் விட பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் தான் வாழ்க்கையை  தீர்மானிக்கும் என்றால் எப்படி?

நான் சொன்ன இயற்கையான திறமை கடவுள் அளித்தது.  அதையே வேலையாக, வாழ்க்கையாக, வேட்கையாக தேர்ந்தெடுத்து கடின உழைப்பை கொடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். வாழ்க்கையில் வெற்றி என்றால், இந்த சமுதாயத்திற்கு உதவியாக இருக்கலாம்.  ஊர் மெச்சும் படி இருக்கலாம்.  உதாரணம் சொன்னால், நம்ம இளையராஜா படிக்கவில்லை.  ஆனால் அவரது இசை நமக்கு எவ்வளவு தேவை படுகிறது.  ரஜினி, கமல் படிக்க வில்லை தான்.  ஆனால் அவர்கள் படங்கள் தான் நிறைய பேருக்கு பொழுது போக்கும் வாழ்வில் ஒரு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. எஸ்.பி.பி, ஜானகி, வைரமுத்து, கண்ணதாசன், வாலி, கே. பாலச்சந்தர், பத்மா சுப்பிரமணியம், இவர்கள் எல்லாம் படிப்பை வைத்தா முன்னுக்கு வந்தார்கள்.  நாடக உலகத்தில் முன்னிற்கும் எஸ்.வி. சேகர், crazy மோகன் இவர்கள் படித்தவர்கள் தான். ஆனால் அவர்கள் படித்த படிப்பை நம்பி இவர்கள் வேலை இல்லை.  நல்லி குப்புசாமியும், GRT நகை அதிபரும் படிப்பை நம்பியா வேலை செய்கிறார்கள்?  ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவ படிப்பு படிப்பவர்களுக்கு அந்தந்த துறையில் திறமை உள்ளதென்று அர்த்தம்.  நம் அலுவலகத்தில் உயரிய பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு நிர்வாகத்திறமை இயற்கையாக உள்ளதென்று அர்த்தம்.

அறிவியலில் நாட்டமும், அதை புரிந்துகொள்ளும் திறமையும் இருந்தால்  பெரிய விஞ்ஞானியாக ஆகலாம்.  அது சில சிறுவர்க்கு இருக்கும். சில சிறுவர்க்கு இருக்காது.  அந்த திறமை இல்லாத சிறுவரை படிக்க சொல்லி கஷ்டபடுத்தினால் எப்படி? இப்போதுள்ள பள்ளிகள் என்ன செய்கிறார்கள். தினமும் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு வர வேண்டும். சில சமயம் பெற்றோரும் செய்து கொடுக்க வேண்டும்.  பள்ளிக் கூடம் பாதி நாள் விடுமுறை.  மீதமுள்ள நாட்களில் அவசர கதியாக பாடம் நடத்த வேண்டியது. மீதம் படிப்பை Tuition வகுப்பில் தொடர வேண்டியது. இல்லை, பெற்றோர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது.  நாமக்கல் போன்ற இடங்களில் பிள்ளைகளை நல்ல மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாய் மாற்றும்  பள்ளிகூடங்கள் வந்துவிட்டன. ஆனால் இப்படி வாங்கும் மதிப்பெண்கள் பயனுள்ளவையா?  பின்னால் இந்த மாணவர்கள் ஒரு வேலையில் சேர்ந்தாலும் , அந்த வேலை பிடித்தமானதாக இருக்காது. முன்னேற்றமும், சந்தோஷமும் கொடுக்காது.

எனவே, பிள்ளைகள் பள்ளிகூடத்தில் படிப்பதை வாழ்வின் அடிப்படை என்று போதியுங்கள்.  அதற்கு தேர்வு என்பது கூட அவசியமில்லை.   எந்த துறையில் பிள்ளைகளுக்கு நாட்டம் உள்ளதோ, அந்த துறையில் ஒரு பெரிய பள்ளியிலோ, ஆசிரியர்/ Coach போன்றோரிடம் சேர்த்து விட்டீர்களேயானால் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு நிச்சயம் வருவார்கள். தொழில்முறை கல்வி மிகவும் பயனுள்ளது.  கண்ட கண்ட பாடங்களையெல்லாம் கல்லூரி படிப்பில் சேர்த்துக்கொள்வதை விட்டு விட்டு, அரசாங்கம் தொழில்முறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம், சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் பிள்ளைகள் பை ஒன்றை மாட்டிக்கொண்டு ஏதாவது ஒரு வகுப்பிற்கு (பள்ளி படிப்பை தவிர) செல்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.  செஸ், கிரிக்கெட், நடனம், இசை இப்படி ஆர்வம் காட்டும் மாணவர்கள் அதிகமாகி வருகிறார்கள். கூடிய விரைவில் வளமான இந்தியா உருவாக இது அடிப்படையாக இருக்கும் என்று  நான் நம்புகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக