ஞாயிறு, நவம்பர் 29, 2015

நகர்ந்து கொள் நகரமே!!!

சென்னையின் தற்போதைய (2015) மக்கள் தொகை 48 லட்சம்.  ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 14 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.  மக்கள் தொகை நெருக்கத்தில் உலகத்திலேயே எட்டாவது இடம்.  இந்த நகரத்தில் 144  போட்டால் கூட மக்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டு இருப்பார்கள். 

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்.  வண்டி ஓட்டும் போது, குறுக்கில் புகுந்து வெளியேறுபவர்கள் எத்தனை பேர் என்று.  ஓட்டுவதற்கு பதில் வண்டியை தள்ளிக்கொண்டே போய்விடலாம் என்று தோன்றும்.   ஞாயிற்று கிழமைகளில் கூட இப்போதெல்லாம் மக்கள் நடமாட்டத்தை சாதாரணமாக  சாலைகளில் பார்க்கலாம்.  முன்னெல்லாம் தி. நகர் ரங்கநாதன் சாலை, புரசைவாக்கம் சாலை போன்றவை தான் கூட்டமாக இருக்கும்.  இப்போதெல்லாம் எல்லா சாலைகளும் ரங்கநாதன் சாலை தான்.

சென்னை மக்கள் அப்படி அலைந்து திரிந்து சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்.  ஜன நெருக்கடி தான்.   பல வருடங்களாக ஒற்றை (single) வீடுகளாக இருந்தவை எல்லாம் இப்போது இருபது வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகி விட்டன. ஒரு குடும்பம் வசித்த இடத்தில் ஒன்பது குடுபங்கள்.  குடி நீர் குழாய்களும், சாக்கடை குழாய்களும், மின்சார இணைப்புகளும், சாலையின் அகலங்களும், தரமும் அப்போது இருந்த மக்கள் தொகைக்காக போடப்பட்டது.  இப்போது, கூடுதலாக வந்து குடியேறிய மக்களுக்காக வசதிகள் செய்யும் போது  அடிக்கடி சாலையை தோண்ட வேண்டியிருக்கிறது.   மின்சார இணைப்பை பெரிது படுத்த வேண்டியிருக்கிறது.  சாக்கடை அடைத்துக்கொள்கிறது.  சாலைகள் போக்குவரத்தை தாங்குவதில்லை. காற்று மாசு பட்டு குழந்தைகள் எல்லாம் Nebulizer பயன்படுத்துவது சாதாரணமாகி விட்டது. மக்கள் முகமுடி திருடர்கள் போல முகத்தை மூடிக்கொண்டு பயணிக்கிறார்கள்.  தெருக்கு தெரு டாக்டர்களின் கிளினிக்குகள் பார்க்கிறோம்.   அந்தக் காலம் போன்று டாக்டர்கள் வீடு தேடி வந்து சிகிச்சை அளித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதெல்லாம் தெரிஞ்சது தானே என்கிறீர்களா? கீழே உள்ள விளம்பரத்தை பாருங்கள்.


இது மாதிரி நிறைய அடுக்கு மாடி குடியிருப்புகள் சென்னையில் வந்துக்கொண்டே இருக்கின்றன.  பில்டர்கள் வாங்க ஆள் கிடைத்தால்  விற்றுக்கொண்டு தான் இருப்பார்கள்.  ஆனால் இதற்கு அனுமதி கொடுக்கும் அரசாங்கத்தை (CMDA) என்ன சொல்ல?  புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கிண்டி, பெசன்ட் நகர் என்று நகரத்தின் முக்கிய இடங்களில் நூறு இருநூறு என்று அடுக்கு மாடி வீடுகள் வந்த வண்ணம் இருகின்றன.  அத்தனை வீடுகளிலும் கார் வைத்திருப்பார்கள்.  அவை அத்தணையும் சாலைக்கு வரும் போது வாகன நெரிசலை எண்ணிப் பாருங்கள்.  ஆபிஸ்க்கு நேரத்தில் போக முடியுமா??

போதுங்க...இனிமேலும் சென்னை தாங்காதுங்க.. கொஞ்சம் நகர்ந்து ஒரகடம், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் பக்கம் சென்னை விரிவடைய வேண்டும்.  அரசாங்கம் அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் இடம் பெயருவார்கள்.  சென்னை சுத்தமான காற்றை சுவாசிக்கும்.  கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களாக !!!

சென்னை நகரமே கொஞ்சம் 
நகர்ந்து போ  - இல்லையெனில் 
நீ நகரமில்லை நரகமே !!!
















புதன், நவம்பர் 25, 2015

மழையும் சென்னையும் ....

போதும் போதும் என்று இந்த முறை (2015) மழை பெய்து விட்டது.  சென்னையில் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதுமே.... இது சம்பந்தமாக  மழை வெள்ளம், வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள், அடித்து செல்லப்பட்ட மனிதர்கள், உடைந்த பாலங்கள், அறுந்த மின் கம்பிகள், சிதைந்த சாலைகள், ஆர்ப்பரித்து செல்லும் ஆறுகள், நிரம்பிய ஏரிகள், திறக்காத பள்ளிகூடங்கள்  என்று பல தரப்பட்ட செய்திகளும், வீடியோக்களும் பார்த்தோம். 

இதற்கான காரணங்களாக ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், இருக்கும் ஏரியை சரியாக தூர் வாராதது என்று பலவற்றை செய்தி தாள்களும், இன்னும் பல ஊடகங்களும் அலசி ஆராய்ந்தன.  



எனக்கு நான் ஐந்தாம் வகுப்பு (1985) படிக்கும் போது சென்னையில் பெய்த அடை  மழை ஞாபகம் வந்தது.  காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் முன்னரே பள்ளி விடுமுறை என்று தெரிந்தும் கூட, இடுப்பு அளவு தண்ணீரில் நடந்தே பள்ளிக்கூடம் போனதும், பள்ளி முழுக்கவே தண்ணீரில் மிதப்பதை பார்த்து பிரமித்ததும், பின் ஆனந்தப்பட்டதும் நினைத்து பார்த்தேன்.  சாலைகளில் ஆங்காங்கே லுங்கி கட்டிய மனிதர்கள் நின்று கொண்டு, இந்த வழியில் போக முடியாது, அந்த வழியில் போக முடியாது (blocku Sir!!) என்று கொஞ்ச நஞ்ச கடமை உணர்ச்சி மனிதர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.  செடிகளும், மரங்களும் ரோட்டில் விழுந்து கிடக்கும்.  வீட்டில் நாள் முழுவதும் மின்சாரம் இருக்காது.  நாங்கள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு நாள் முழுவதும் விளையாடிகொண்டே இருப்போம்.  

இதே ஞாபகங்கள் 1995 போதும், 2005 போதும், இப்போது 2015 போதும் வந்தன.  மேலும் இப்படி மழை பெய்யும் போதெல்லாம் வரும்.  அதற்கு தமிழகத்தை ஆளும் கட்சிகள், ஆளபோகிற கட்சிகள் வழி செய்துகொண்டே இருக்கும்.  மற்ற நாடுகளும், ஏன் மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்கள் கூட முன்னேற்ற பாதையில் போகும் போது, தமிழ் நாடு பின்னோக்கியே போவது ஏன்?  அதற்கு காரணம், நம் அரசியல் வாதிகள் அயோக்கியர்கள் மட்டுமல்ல, கடைந்தெடுத்த முட்டாள்கள்.  அட அயோக்கியர்களே, நீங்கள் காசு அடித்து விட்டு போங்கள்.  கொஞ்சம் புத்திசாலிதனமாகவும்  யோசித்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்களேன்.  யாராவது ஒரு நல்ல மனிதரை தமிழகத்தை வழி நடத்த  கடவுள் அனுப்பி வைப்பார் என்று பிராத்திக்கிறேன்.

செவ்வாய், நவம்பர் 10, 2015

தீபாவளி

சென்னையில் இரண்டு தீபாவளி மழை இல்லாமல் இருந்தால் மூன்று தீபாவளிக்கு மழை வந்து கெடுத்து விடும்.  இந்த முறை மழை வந்து விட்டது. ஆனால் திங்கள் கிழமையே நல்ல மழை வந்து விட்டதால், நிறைய பேர் ஆபீஸ்க்கு லீவ் போட்டு விட்டார்கள் (நான் மட்டும் விதிவிலக்கா என்ன?). அதனால் ஒரு நாலு ஐந்து நாள் லீவ் போட்டு மனைவி பிள்ளைகளை Bore அடிக்க வைத்து விட்டு, நிறைய தூக்கம் போட்டு, வயிறு கலங்க பலகாரம் சாப்பிட்டு, கொஞ்சம் பட்டாசு வெடித்து, whatsapp பார்த்து தீபாவளியை கழித்தாகி  விட்டது.

தீபாவளி என்றால் Festival of lights என்று சொல்லுவார்கள்.  ஆனால் எங்கள் ஏரியாவில் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை. அதனால் கிடைத்த அனுகூலம்  டிவி பார்க்கவில்லை. பட்டாசு வெடிக்க சாலைக்கு சென்றால் மழை வருவதும், வீட்டுக்குள் வந்தால் மழை நிற்பதுமாக இருந்தது.

சென்னையில் தீபாவளி என்றால் இப்போதைய Trend;  காலையில் லேட்டாக எழுந்துகொள்வது, பட்டாசு வெடிப்பது (ஒற்றை வெடிகள் எல்லாம் மலை ஏறி விட்டன. சர வெடிகளும் இரவில் வெடிக்கும் வானவெடிகளும் தான் இப்போது latest), புது படங்கள் பார்ப்பது, நண்பர்கள் கூட சேர்ந்து ஊரை சுற்றுவது , காலையிலேயே சரக்கு அடிப்பது (new trend!!) போன்றவை.

90களில், ரஜினி கமல் படம் பார்ப்பதற்கு டிக்கெட்டுக்காக அலைந்தது, புது படப் பாடல்களுக்காக டிவி முன் (தூர்தர்ஷன்) நகத்தை கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது, கலர் கலராக ஆடை உடுத்தி கலருக்காக கால் கடுக்க வீதிகளில் அலைந்தது, நூறு ஊசி வெடிகள் கொண்ட பிஜிலி பாக்கெட்டை ஒவொன்றாய் மணிக்கணக்கில் வெடித்தது, ஆடை தைக்க டெய்லரிடம் கடைசி நாட்களில் சண்டை போட்டது, பட்டாசு வெடித்த குப்பைகளை வைத்து நம் வீட்டில் நிறைய பட்டாசுகள் வெடித்தோம்  என்று பெருமை கொண்டது என்று நிறைய பழைய நினைவுகள் வந்து போகின்றது.

தீபாவளி பண்டிகைகளின் சூப்பர் ஸ்டார் !! வெளிநாட்டுகாரர்களுக்கு கிறிஸ்துமஸ் போன்று நமக்கு தீபாவளி என்று கூட சொல்லலாம். ஆனால் விடுமுறை விடுவதில்?? வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, பள்ளி கூடங்கள் முதற்கொண்டு அலுவலகங்கள் வரை இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். இங்கும் தீபாவளிக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கலாமே.  போஸ்டர், கட்-அவுட் வைக்கும் செலவில் தீபாவளிக்கு பொது இடங்களில் மின்சார அலங்காரங்கள் வைக்கலாமே.

தீபாவளி முடிந்து போன பின், என் பிள்ளையை பார்த்து பண்டிகையெல்லாம் முடிஞ்சு போச்சு.  நாளையிலிருந்து படிக்க வேண்டும் என்று சொன்ன பின் தான், இதையே தான் என் அப்பா அப்போது சொல்லி கடுப்பேத்துவார் என்று ஞாபகம் வந்தது. உடனே குழந்தையிடம் ஓகே, நாளைக்கும் பட்டாசு வெடிக்கலாம் என்று குஷிபடுத்தினேன்.






ஞாயிறு, நவம்பர் 01, 2015

அந்தக் காலத்து பயணங்கள்

உங்களுக்கு அரச புரசலான விஷயம் பிடிக்கும் என்றால் மேற்கொண்டு படியுங்கள்.  இது சுவையான பழைய விஷயங்களை தேடிக் கண்டு பிடித்து இடும் பதிவு.

நாம் இப்போதெல்லாம் வெளியூர் பயணம் செல்வதற்கு சுலபமாக விமானம் , ரயில் , பஸ் என்று எல்லா வசதியும் இருக்கிறது.  அந்த காலத்தில் இவை எதுவும் இல்லாத போது என்ன செய்து இருப்பார்கள்?  நடையாய் நடந்து இருப்பார்கள். இல்லை மாட்டு வண்டியில், குதிரை வண்டியில் பிராயணம் செய்து இருப்பார்கள். வசதி இல்லை என்று வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்கள் அல்ல அவர்கள். அனாயாசமாக பல காத தூரம் (திருச்சி, மதுரை, சிதம்பரம் , காசி போன்று ) தேசாந்திரம் போனவர்கள். காடு, மலை, இருட்டு, திருடர் பயம் எல்லாம் தாண்டி எப்படி போயிருப்பார்கள்.  இப்போது கூட நாம் ஊர் பகுதிகளில் சாலையோரம் அந்தக் கால சத்திரங்களை சிதிலமடைந்த நிலையில் பார்க்கலாம்.  அந்தக் காலத்தில் அவை வழி போக்கர்கள் தங்கி செல்லும் இடமாக சுறுசுறுப்பாக இருந்திருக்கும். இரவில், இருட்டில் மின்விளக்கு இல்லாத காலத்தில் எப்படி பிரயாணம் செய்து இருப்பார்கள்?    மேலே  படியுங்கள்.

நான் குறுகிய காலத்துக்கு எப்போது வெளியூர் சென்றாலும் படிப்பதற்கென்று ஏதாவது  ஒரு புத்தகம் கொண்டு செல்வதுண்டு. அப்படி ஒருமுறை வெளிநாடு செல்லும் போது விமானநிலையம் சென்று சேர்ந்த போதுதான், எடுத்துச் செல்ல வேண்டிய  புத்தகத்தை வீட்டிலேயே வைத்து விட்டு வந்ததை அறிந்தேன்.   எனவே, விமான நிலையத்தில்  உள்ள கடையில் ஒரு புத்தகம் வாங்கினேன். "தமிழ்நாடு - நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்" என்பதே அதன் பெயராகும். எழுதியவர் - ஏ .கே . செட்டியார் .  அந்த காலத்தில் வெளி வந்த பல கட்டுரைளை திரட்டி தொகுத்திருந்தார். .

தமிழ் மொழியில் பயண இலக்கியம் மற்ற தேச மொழிகளில் உள்ளது போல் இல்லையே என்ற ஆதங்கத்தில் இந்த கட்டுரை தொகுப்பு இயற்றப்பட்டுள்ளது. அவற்றில் எனக்கு பிடித்த சில :



சங்கரநாயினார் கோயில் யாத்திரை 
(செல்லமாள் - பாரதியார் மனைவி, கதாமாலிகா - சுதேசமித்திரன் வெளியீடு,
10-11-1920)

நான் சிறு குழந்தையாக இருக்கும் போது, ஒரு நாள் சாயங்காலம் நாலு மணிக்கு சங்கர நாயினார் கோயிலுக்கு போக, நான், அம்மா, என் தம்பியொன்று சின்னக் குழந்தை, அக்கா, அக்கா புருஷன் ஐந்து பேரும் புறப்பட்டோம். அந்த ஊருக்கு போக ரயில் கிடையாதாதனால் மாட்டு வண்டி வைத்துக் கொண்டு போகிறோம்.

எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் போனவுடன் இறைபனை என்றொரு கிராமம் சேர்ந்தோம். அதனருகே ஒரு பெரிய பனந்தோப்பு உண்டு. அது ஒரு சிறிய மலைக்குப் பக்கத்திலிருக்கிறது. தோப்புக்கும் அந்த மலைக்கும் நடுவழியாக ஒரு பாதையுண்டு. அதைச் சரிபடுத்த முடியவில்லை.

கொஞ்ச தூரம் போனதும் எங்கள் வண்டிச் சக்கரத்தின் பட்டை கழன்று துண்டு துண்டாகக் கீழே விழுந்து விட்டது. வண்டி கொஞ்சம் சாய்ந்ததும் எல்லோரும் கீழே குதித்து விட்டோம். வண்டிக்காரன் என்னென்னவோ செய்து பார்த்தான். அதை சரிபடுத்த முடியவில்லை.

"நீங்கள் கொஞ்சம் இங்கே இருங்கள். நான் திரும்பி ஊருக்குப் போய் ஒரு வண்டி கொண்டு வருகிறேன். அந்த வண்டியில் நாம்  போகலாம்.  இந்த வண்டியை இங்கே போட்டுவிட்டுப் போய் விடலாம். பின்பு என் ஆள் வந்து எடுத்துக் கொண்டு போவான்" என்று சொன்னான்.  சரி, என்றோம். அவன் போய் விட்டான். நாங்கள் அங்கேயே மணலில் உட்கார்ந்திருந்தோம்.

அவன் போய் வெகு நேரம் வரவில்லை.  இருட்டிப் போய் விட்டது. நாங்கள் திரும்பி ஊரை நோக்கிப் போகிறோம். எங்கள் ஊருக்குப் பெயர் கடவூர். திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள எங்கள் கடவூரிலிருந்து சங்கரனாயினார் கோயில் ஸ்தலம் சுமார் 50 கல் இருக்கலாம். நாங்கள் இறைபனையிலிருந்து திரும்பி ஊரை நோக்கிப் போகிறோம். எதிரே, பாதி தூரத்தில் வண்டிக்காரன் வண்டி கொண்டு வந்தான்.

நாங்கள் வண்டியில் ஏறிக்கொண்டு கடவூருக்கு போகாமல் யாத்திரையை நிறுத்த வேண்டாம் என்றெண்ணி, மறுபடி இறைபனைத் தோப்புக்கு வந்து சேர்ந்தோம்.  இதற்குள் நிரம்ப இருட்டிப் போய்விட்டது.

இறைபனைக்கும் மத்தளப்  பாறைக்கும் நடுவில் தான் அடித்துப் பறிக்கிற இடம்.  அங்கே திருடர் ஒளிந்து கொள்ள சௌகர்யமான இடம் இருக்கிறது.  இரவில் நல்ல இரவில், நாங்கள் அந்த வழி போகும் படி நேரிட்டது.  அந்தக் கோமதிதான் காப்பாற்ற வேண்டும் என்றெண்ணிப் போகிறோம்.  கொஞ்ச தூரம் போனவுடன் நாலைந்து பேர் பேசுகிற சத்தம் கேட்டது.

'திருடன் வந்து விட்டான் ' என்று பதறிப் போய் எங்களிடமிருந்த நகைகளைக் கழற்றித் துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி வண்டியில் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டோம்.  வண்டிக்காரனை வண்டியின் பின்னால் நடந்துவரச் சொல்லிவிட்டு, அக்கா புருஷன் வண்டியை விரைவாக ஒட்டிக் கொண்டு போனார்.  கொஞ்ச தூரம் போனவுடன் பத்துப் பேர் எதிரே வந்தார்கள்.  அவர்கள் வண்டியை  நிறுத்தச் சொன்னார்கள். நிறுத்தினோம்.

"நீங்கள் ஏன் இந்த இருளில் வந்தீர்கள்? இரண்டு நாழிகைக்கு முன் இங்கே கொள்ளையடித்தார்கள். சமீபத்தில் சத்திரமிருக்கிறது.  சீக்கிரம் போய்ச் சேருங்கள்" என்று சொல்லிவிட்டு போனார்கள்.

நாங்கள் வண்டியை ஒட்டிக் கொண்டு சத்திரம் போய்ச் சேர்ந்தோம். அப்போது மணி இராத்திரி பன்னிரண்டிருக்கும்.

சத்திரத்துக் கதவு சாத்தியாய் விட்டது.  கதவைத் திறக்கச் சொல்லி, உள்ளே போய் நாங்கள் கொண்டு போயிருக்கிற சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டோம்.  எங்களுக்குத் தூக்கமே வரவில்லை. விடியற்காலை நாலு மணிக்கு அங்கிருந்து வண்டி கட்டினோம்.  இரவில் எட்டு மணிக்குச் சங்கரனாயினார் கோயில் போய்ச்சேர்ந்தோம்.  ஒரு  பாட்டியம்மா வீட்டில் இறங்கினோம்.  அங்கு ஜலக் கஷ்டம்.  கோவில் வாசலில் ஒரு பெரிய குளம். அதற்குப் பெயர் நாகர் சுனை என்பார்கள்.  அதில் முக்கால் பங்கு பாசியும் கால் பங்கு ஜலமுமாக இருக்கும்.  ஒரு பெரிய துணியை நாலைந்தாக மடித்து வடிகட்டி ஜலம் எடுப்பார்கள்.  அந்த ஜலமே சகலத்துக்கும் உபயோகம்.

மறுநாள் காலையில் நாகர் சுனையில் ஸ்நானம் பண்ணிவிட்டுக் கோவிலுக்குப் போனோம்.  சுவாமி தரிசனம் பண்ணினோம்.  அக்கோவில் பெரும் புகழ்ப் படைத்தது.  பேய் பிடித்தவர் எல்லாம் அங்கு வந்து ஆடுவார்கள்.  அதெல்லாம் அதிக வேடிக்கையாக இருக்கும். மூன்று நாள் அங்கிருந்தோம்.

நாங்கள் ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் செய்ய வேண்டியனவெல்லாம் செய்துவிட்டு, கோமதி சமேத சங்கர நாராயண மூர்த்திக்கு நாங்கள் அடிமைச் சீட்டெழுதிக் கொடுத்துவிட்டு, ஊருக்கு புறப்பட்டு வருகிறோம்.  வரும் வழியில் ஒரு பெரிய குளம் இருந்தது.  அதில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்கொரு பெரிய மரத்தடியில் படுத்துக் கொண்டிருந்தோம்.  சாயங்காலம் நாலு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.


கட்டை வண்டிப் பயணம் 
(1944 ஆண்டு வெளி வந்தது )
அந்நாளில் கல்யானங்களுக்காக கல்யாண ஊருக்கு கூட்டமாய்க் கட்டை வண்டியில் மூன்று நாள் பயணம் கூடப் போவார்கள். நெருக்கி உட்கார்ந்தாலும் கூட எல்லோருக்கும் இடம் இராது. மாற்றி மாற்றிக் கொஞ்சம் தூரம் சிலர், கொஞ்ச தூரம் வேறு சிலர் என்று பிரித்துக் கொள்வார்கள்.  பெண்டுகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் வேறு வண்டிகள்; புருஷர்களுக்கு வேறு வண்டிகள் உண்டு. இரண்டும் கெட்டான் என்ற வயசுப் பையன்கள் அங்கும் இங்குமாக சௌகர்யம்போல் சேர்ந்து கொள்வார்கள்.

வாய்க்கால், பள்ளம், மேடு முதலிய இடையூறுகள் நேர்ந்தால் மாடும், வண்டிக்காரனும், நிர்வாகிகளான புருஷர்களும் படும்பாடு அதிகமாக இருக்கும். சிலர், 'நமக்கு என்ன ?' என்று உதாசீனமாய் அதைப் பார்க்காதவர் போல் நழுவுவார்கள். திருட்டு பயம் உண்டு. இதற்காகப் பெண்டுகளும், குழந்தைகளும் நகை போடாமல் வருவார்களா? மேலே நகை மிகுதியா இருக்க இருக்க, உள்ளே நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இருட்டினதும் பலமுள்ள புருஷர்களில், முந்திச் சிலரும் வண்டியை ஒட்டிச் சிலரும், பின்னால் சிலருமாகப் பாதுகாப்பார்கள்.

குளக்கரையைக் கண்டதும் சிறுவர்கெல்லாம் பசியும் தாகமும் தாங்கவே முடியாது.  தோசைக்கும், இட்டலிக்கும், புளியஞ் சாதத்துக்கும், தயிர்ச் சாதத்துக்கும் மன்றாடுவது வேடிக்கையாக இருக்கும். மிளகாய் பொடியும், வேப்பில்லை கட்டியும், வெல்லம் பட்ட பாடு படும். சிறுமிகள் தாம்பூலம் போட்டு 'உன் நாக்கு அதிகச் சிவப்பா, என் நாக்கு அதிகச் சிவப்பா? என்று நாக்கை நீட்டிக் கண்ணைக் குறுக்கிப் பார்ப்பதும், புல்லாக்கை நக்குவதும் போட்டோ பிடித்தால் வெகு ஆச்சர்யமாக இருக்கும்.