செவ்வாய், நவம்பர் 10, 2015

தீபாவளி

சென்னையில் இரண்டு தீபாவளி மழை இல்லாமல் இருந்தால் மூன்று தீபாவளிக்கு மழை வந்து கெடுத்து விடும்.  இந்த முறை மழை வந்து விட்டது. ஆனால் திங்கள் கிழமையே நல்ல மழை வந்து விட்டதால், நிறைய பேர் ஆபீஸ்க்கு லீவ் போட்டு விட்டார்கள் (நான் மட்டும் விதிவிலக்கா என்ன?). அதனால் ஒரு நாலு ஐந்து நாள் லீவ் போட்டு மனைவி பிள்ளைகளை Bore அடிக்க வைத்து விட்டு, நிறைய தூக்கம் போட்டு, வயிறு கலங்க பலகாரம் சாப்பிட்டு, கொஞ்சம் பட்டாசு வெடித்து, whatsapp பார்த்து தீபாவளியை கழித்தாகி  விட்டது.

தீபாவளி என்றால் Festival of lights என்று சொல்லுவார்கள்.  ஆனால் எங்கள் ஏரியாவில் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை. அதனால் கிடைத்த அனுகூலம்  டிவி பார்க்கவில்லை. பட்டாசு வெடிக்க சாலைக்கு சென்றால் மழை வருவதும், வீட்டுக்குள் வந்தால் மழை நிற்பதுமாக இருந்தது.

சென்னையில் தீபாவளி என்றால் இப்போதைய Trend;  காலையில் லேட்டாக எழுந்துகொள்வது, பட்டாசு வெடிப்பது (ஒற்றை வெடிகள் எல்லாம் மலை ஏறி விட்டன. சர வெடிகளும் இரவில் வெடிக்கும் வானவெடிகளும் தான் இப்போது latest), புது படங்கள் பார்ப்பது, நண்பர்கள் கூட சேர்ந்து ஊரை சுற்றுவது , காலையிலேயே சரக்கு அடிப்பது (new trend!!) போன்றவை.

90களில், ரஜினி கமல் படம் பார்ப்பதற்கு டிக்கெட்டுக்காக அலைந்தது, புது படப் பாடல்களுக்காக டிவி முன் (தூர்தர்ஷன்) நகத்தை கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது, கலர் கலராக ஆடை உடுத்தி கலருக்காக கால் கடுக்க வீதிகளில் அலைந்தது, நூறு ஊசி வெடிகள் கொண்ட பிஜிலி பாக்கெட்டை ஒவொன்றாய் மணிக்கணக்கில் வெடித்தது, ஆடை தைக்க டெய்லரிடம் கடைசி நாட்களில் சண்டை போட்டது, பட்டாசு வெடித்த குப்பைகளை வைத்து நம் வீட்டில் நிறைய பட்டாசுகள் வெடித்தோம்  என்று பெருமை கொண்டது என்று நிறைய பழைய நினைவுகள் வந்து போகின்றது.

தீபாவளி பண்டிகைகளின் சூப்பர் ஸ்டார் !! வெளிநாட்டுகாரர்களுக்கு கிறிஸ்துமஸ் போன்று நமக்கு தீபாவளி என்று கூட சொல்லலாம். ஆனால் விடுமுறை விடுவதில்?? வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, பள்ளி கூடங்கள் முதற்கொண்டு அலுவலகங்கள் வரை இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். இங்கும் தீபாவளிக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கலாமே.  போஸ்டர், கட்-அவுட் வைக்கும் செலவில் தீபாவளிக்கு பொது இடங்களில் மின்சார அலங்காரங்கள் வைக்கலாமே.

தீபாவளி முடிந்து போன பின், என் பிள்ளையை பார்த்து பண்டிகையெல்லாம் முடிஞ்சு போச்சு.  நாளையிலிருந்து படிக்க வேண்டும் என்று சொன்ன பின் தான், இதையே தான் என் அப்பா அப்போது சொல்லி கடுப்பேத்துவார் என்று ஞாபகம் வந்தது. உடனே குழந்தையிடம் ஓகே, நாளைக்கும் பட்டாசு வெடிக்கலாம் என்று குஷிபடுத்தினேன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக