வெள்ளி, மே 06, 2016

ஹலோ! முஜே ஹிந்தி நஹி ஆத்தா ஹை!!!

அலுவலகத்தில் அவ்வப்போது செல் போனில் சில தொந்தரவு  கால்கள் வரும். பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கும் அனுபவம் தான்.  சில போன் கால்கள் வட இந்தியாவில் இருந்து வரும்.   டெல்லி, நொய்டா, லக்னா, பட்னா இது மாதிரி. இவர்களுக்கு தாம் சென்னையில் உள்ள ஆளுக்கு தான் போன் பண்றோமா என்பதே தெரியாது.  போன் பண்ணியவுடனே ஹிந்தியில் தான் ஆரம்பிப்பார்கள்.  சம்பாஷனை இப்படி போகும்.

எதிர் முனை:  ஹலோ, ஆப் ஷேர் மார்கெட் மே Trading கர்தே ஹே க்யா ? (நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் trading செய்கிறீர்களா?) இதற்கு,

நான்:  ஆப் அங்க்ரேசி மே பாத் கீஜியே.  ஹம்கோ ஹிந்தி நஹி ஆத்தா ஹை   அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள். எனக்கு ஹிந்தி தெரியாது என்று ஹிந்தியிலேயே சொல்லுவேன். 

எதிர்முனையும் விடாமல்:  அப்கோ தோ ஹிந்தி அச்சி தரப் ஆத்தா  ஹை என்பார்கள் (உங்களக்கு தான் ஹிந்தி நன்றாக பேச வருகிறதே!!).  எனக்கு ஹிந்தி தெரியாது என்பதை ஹிந்தியில் தான் சொல்வேன்.  அவர்களை கொஞ்சம் கடிக்க வேண்டும் என்பதற்காக.  முதலில் அலுவலக நேரத்தில் போன் செய்வது சரியில்லை.  பிறகு தமிழ் மக்களிடம் ஹிந்தியில் பேசுவதும் சரியில்லை என்பதால். 

விஷயம் என்னவென்றால் வட இந்தியாவில் நிறைய பேருக்கு சென்னை எங்கே இருக்கிறது என்பதே தெரியாது.  அப்புறம் திருச்சி, தஞ்சாவூர் என்றால் அது என்ன என்பதெல்லாம் சுத்தம்.  அவர்களுக்கு தென் இந்தியா முழுதும் மெட்ராஸ் தான்.  இங்கு எல்லோரும் மதராசி தான்.   சில வட இந்தியர்கள் மதராசிகள் என்றால் கருப்பாக இருப்பார்கள் என்று வேறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் விமானத்தில் மதுரை போயிருக்கும் போது, விமானத்தில் மருந்துக்கு கூட தமிழில் அறிவுரைகள் கொடுக்க வில்லை.  எல்லாம் ஹிந்தியும் ஆங்கிலமும் தான். மத்தியில் B.J.P அரசு சேமிப்பு திட்டங்களுக்கும் இன்னும் பல மக்கள் நல திட்டங்களுக்கும் ஹிந்தி பெயர்களையும், சமஸ்க்ரத பெயர்களையும் வைக்கிறது.  ஒன்றுமே புரிவதில்லை.  இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நாட்டில் ஹிந்தியை கொண்டுவந்து விடலாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.


வட இந்திய அரசியல்வாதிகளுக்கும், ஹிந்தி பண்டிதர்களுக்கும் கேரளா, கர்நாடகம் மாதிரி தமிழ் நாட்டுலேயும் ஹிந்தி பேசும் மொழியாக்க வேண்டும் என்று பெரும் ஆசை உண்டு.  ஆனால் நம் பய மக்கள் தான் இன்னும் ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா என்ற லெவெலேயே இருக்கிறார்கள்.  ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.  நாம் தமிழ் நாட்டில் இருந்துக் கொண்டு ஹிந்தி கற்பதில்லை.  மும்பையோ, டெல்லியிலேயோ வாழ போனால் ஒரு மாதத்தில் ஹிந்தி கற்றுக் கொண்டு விடுவோம். நம் ஷாப்பிங் மால்களில் வேலை செய்யும் பிற மாநிலத்துவரை கவனியுங்களேன்.  அஞ்சு வருஷம் ஆனாலும் ஆனா, ஊனா தெரியாது.

தேசிய அளவில் ஹிந்தியும், மாநில அளவில் தாய் மொழியும்  இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்கிறார்கள்.  நாம் தேசிய அளவில் ஆங்கிலம் இருந்துவிட்டு போகட்டுமே என்று நினைக்கிறோம்.  தமிழும் ஆங்கிலமும் கற்றுக் கொண்டு விட்டால் அடுத்ததாக நாம் ஹிந்தி கற்றுக் கொள்ளலாம்.  அப்போது தான், வட இந்தியர் நம்மிடம் ஹிந்தியில் பேசும் போது, முஜே ஹிந்தி நஹி ஆத்தா ஹை என்று தெளிவாக பதில் சொல்ல முடியும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக